ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம்
மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் ஷகீட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் 15ஆம் நாள் தொடக்கம், 26ஆம் நாள் வரை, இவர் சிறிலங்காவில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மதம் அல்லது நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான உரிமையை அனுபவிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் தடைகளை, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் அடையாளம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் முன்னைய சிறப்பு அறிக்கையாளர் அஸ்மா ஜஹாங்கீர் கடந்த 2005ஆம் ஆண்டு, சிறிலங்காவுக்குப் பயணத்தை மேற்கொண்ட பின்னர், முன்வைத்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அவர் ஆராயவுள்ளார்.
இவர் தனது 12 நாள் பயணத்தின் போது, சிறிலங்கா அரசாங்க பிரதிநிதிகள், மத அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் சமூகங்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடுவார்.
இவர் தனது பயணம் தொடர்பான அறிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.