மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மோதப் போகும் ரணில்- கோத்தா?

இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்சவுமே போட்டியிடவுள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐதேக தமது பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரிலும்,  பொதுஜன பெரமுன தமது பங்காளிகளுடன் இணைந்து மற்றொரு கூட்டணியை அமைத்தும், வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளன.

ஐதேக கூட்டணியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோரின் பெயர்கள் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளன.

எனினும், ரணில் விக்ரமசிங்க போட்டியில் இருந்து விலகி, கரு ஜயசூரியவை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேவேளை, சஜித் பிரேமதாசவை வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு  தீவிர முயற்சிகள் நடந்து வந்தன.

அதேவேளை பொதுஜன பெரமுன கூட்டணியின் சார்பில், கோத்தாபய ராஜபக்ச நிறுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்கவும், கோத்தாபய ராஜபக்சவுமே அதிபர் தேர்தலில் மோதவுள்ளனர் என கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க யானை சின்னத்திலும், கோத்தாபய ராஜபக்ச மலர் மொட்டு சின்னத்திலும் போட்டியிடுவார்கள் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *