புதுடெல்லி வருமாறு சிறிலங்கா அதிபருக்கு அழைப்பு
அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் (International Solar Alliance) உருவாக்கக் கூட்டம் மற்றும் சூரிய மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் வரும் மார்ச் 11ஆம் நாள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பிரெஞ்ச் அதிபர் இமானுவெல் மக்ரோனும் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரெஞ்சுத் தூதுவரும் இந்தியத் தூதுவரும் இணைந்து நேற்று சிறிலங்கா அதிபரிடம் இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழைக் கையளித்தனர்.
இந்த அழைப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார்.
அனைத்துலக சூரிய கூட்டமைப்பு தொடர்பான வரைவு உடன்பாட்டில் சிறிலங்கா கடந்த ஜனவரி 31ஆம் நாள் புதுடெல்லியில் கையெழுத்திட்டது. இந்த உடன்பாட்டில் 54 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அல்லது கையெழுத்திட இணங்கியுள்ளன.
புதுடெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அனைத்துலக சூரிய கூட்டமைப்பு மாநாட்டில், 30 நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 500 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.