நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தக் கோருகிறார் மகிந்த
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
கொழும்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்ற பாரிய வெற்றியை அடுத்து மகிந்த ராஜபக்ச இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை இந்த தற்போதைய அரசாங்கம் இழந்து விட்டது,
புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும்கட்சியை எதிர்க்கட்சி ஒன்று தோற்கடித்த வரலாறு இதுவரை சிறிலங்கா அரசியலில் இடம்பெறவில்லை. இது ஒரு வரலாற்று வெற்றி” என்றும் தெரிவித்துள்ளார்.