அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கவில்லை – கோத்தா
அரசியலுக்கு வருவது தொடர்பாக தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாடு திரும்பினார்.
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள வெற்றி தொடர்பாகவும், அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த கோத்தாபய ராஜபக்ச, “பொய்யான பரப்புரைகளால் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மக்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் மக்கள் இப்போது உண்மையை உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியலுக்கு வருவது தொடர்பாக நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ளதால், சிறிலங்காவில் பிரதமர் போன்ற பதவிகளை என்னால் வகிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க குடியுரிமையை கோத்தாபய ராஜபக்ச கைவிட்டு, அரசியலில் பிரவேசிக்கவுள்ளார் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.