மேலும்

அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

faizer-mustaphaஉள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலை தாமதிக்கும் வகையில் செயற்படுவதாக கூறியே அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தினேஸ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, உதய கம்மன்பில உள்ளிட்ட கூட்டு எதிரணியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.

எனினும், இந்தப் பிரேரணையில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கையெழுத்திடவில்லை.

அதேவேளை, பைசர் முஸ்தபாவுக்கு எதிராக  கூட்டு எதிரணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் தமது கட்சி கையெழுத்திடவில்லை என்றும், அது முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது கட்சி தனியாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே ஐதேகவின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், அமைச்சர் பைசர் முஸ்தபா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பை அவர் சரியாக வெளியிடாததால் தான் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை இடைநிறுத்தி வைத்திருப்பதாகவும், இது திட்டமிட்ட சதி என்றும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *