ஈபிஆர்எல்எவ்வுக்குள் குழப்பம் – தமிழ் அரசுக் கட்சிக்கு தாவினார் ரவிகரன்
வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரான துரைராசா ரவிகரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில், அந்தக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலில் ஈபிஆர்எல்எவ் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார் ரவிகரன். இதுவரை ஈபிஆர்எல்எவ் சார்பில் இயங்கி வந்த அவர், தற்போது, அந்தக் கட்சியில் இருந்து விலகி, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டார்.
தமது முடிவை ஈபிஆர்எல்எவ் பொதுச்செயலர் சிவசக்தி ஆனந்தனுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து, புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் ஈபிஆர்எல்எவ் கட்சியின் முடிவை அடுத்தே, ரவிகரன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதேவேளை, ஈபிஆர்எல்எவ் சார்பில் வட மாகாணசபையில் அங்கம் வகிக்கும், மேலும் இரண்டு உறுப்பினர்களும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.