மேலும்

சிறிலங்கா கொடியை ஏற்ற மறுத்த கல்வி அமைச்சர் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கிறார் ஆளுனர்

ananthi-sarveswaran-ministers (2)சிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்ற வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுப்புத் தெரிவித்தமை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரவுள்ளதாக வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வவுனியா – ஈரப்பெரியகுளத்தில் உள்ள பரகும் மகாவித்தியாலய என்ற சிங்களப் பாடசாலையில், கடந்தவாரம் வசதி குறைந்த மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு அழைக்கப்பட்டார்.

எனினும், அவர் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்ததால், கல்வி அதிகாரிகள் அதனை ஏற்றியிருந்தனர்.

இதையடுத்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர், சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறி விட்டதாகவும், அவர் மீது வட மாகாண ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தென்னிலங்கையில் இருந்து குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

சிறிலங்காவின் தேசியக்கொடி பன்மைத்துவத்தை பிரதிபலிக்கவில்லை என்பதால் அதனை ஏற்றுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று வட மாகாண கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்தது, அரசியலமைப்பு மீறலா என்பது குறித்து நாளை தாம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரவுள்ளதாக வட மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *