அரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார்
போரில் சிறிலங்கா படையினர் சிலர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரில், சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர், “உங்கள் மனசாட்சிக்கு ஏற்ப, நீங்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே சில விடயங்கள் இருந்தன.
அரசியல்வாதிகளுக்காக இராணுவத்தில் உள்ள சிலரால் அவை நடத்தப்பட்டன.
இவை சட்டவிரோதமானவை, எமது மக்களின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிரானது.
அரசியல்வாதிகளுக்காக செயற்பட்ட சிறிய எண்ணிக்கையிலான அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் அப்பாவிகள் என்றால், விடுவிக்கப்படுவார்கள். போர் வீரர்கள் வேட்டையாடப்பட்டு வருவதாக அரசியல் மேடைகளில் குற்றச்சாட்டுகளை கேட்கிறேன்.
அந்தக் குற்றச்சாட்டுகளை வன்மையாக மறுக்கிறேன். இராணுவம் தனது பெயரை தெளிவுபடுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.