ஒற்றையாட்சி, பௌத்தத்தை விட்டுக்கொடுக்க முடியாது – சிறிலங்கா பிரதமர்
புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறை மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை ஆகிய விடயங்களில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமிருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இளம் பௌத்த பிக்குகளின் குழுவொன்றைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
“அரசியலமைப்பில் பௌத்தம் ஒருபோதும் முன்னுரிமையை இழக்காது. ஒற்றையாட்சி முறையிலும் மாற்றம் செய்யப்படாது.
நாட்டின் ஒற்றையாட்சி முறைக்கோ, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்கோ எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
பௌத்தத்துக்கான முன்னுரிமையைப் பாதுகாக்கும் அரசாங்கம், ஏனைய மதங்களுக்கான சம உரிமையையும் உறுதிப்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்தார்.