சென்னை அருகே தொடங்கியது அதிநவீன போர்க்கப்பல்களின் பாரிய கூட்டுப் பயிற்சி
மலபார் பயிற்சி எனப்படும், இந்திய, அமெரிக்க, ஜப்பானிய கடற்படைகளின் பாரிய கூட்டுப் போர் ஒத்திகை, வங்காள விரிகுடாவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
சென்னை துறைமுகம் மற்றும் அதனை அண்டிய கடற்பகுதியில் தரித்து நிற்கும் அமெரிக்காவின் பாரிய விமானந்தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் தலைமையிலான போர்க்கப்பல்களும், இந்தியாவின் பாரிய விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா தலைமையிலான போர்க்கப்பல்களும், ஜப்பானின் பாரிய உலங்குவானூர்தி தாங்கி கப்பலான ஜேஎஸ் இசுமோ தலைமையிலான போர்க்கப்பல்களும் இணைந்து இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றுள்ளன.
1992ஆம் ஆண்டு தொடக்கம் நடந்து வரும் இந்த கூட்டுப் பயிற்சி முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இந்த ஆண்டில் கவனத்தை பெற்றுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், நீர்மூழ்கிகளை கண்டறிந்து வேட்டையாடும் நோக்கில், இந்தக் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை கடற்பரப்பில் முதற்கட்டமாகவும், வங்காள விரிகுடாவில் இரண்டாவது கட்டமாகவும், இந்த கூட்டுப் பயிற்சி இடம்பெறும்.
மொத்தம் 20இற்கும் அதிகமான போர்க்கப்பல்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன. இதில் இந்தியக் கடற்படையின் 7-8 வரையான கப்பல்கள் இடம்பெறுகின்றன.
இந்தக் கூட்டுப் பயிற்சியில் அமெரிக்காவின், விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ், யுஎஸ்எஸ் பிரின்சிடன், ஆகியவற்றுடன் அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரிக் கப்பல்களான யுஎஸ்எஸ் ஹொவார்ட், யுஎஸ்எஸ் ஷோப், யுஎஸ்எஸ் பிங்னி, யுஎஸ்எஸ் கிட் ஆகியனவும், விமான அணிகளும் பங்கேற்கின்றன.
இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க கடற்படையின் பி-8 ஏ ரகத்தைச் சேர்ந்த இராட்சத நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு விமானங்களும் அரக்கோணத்தில் உள்ள இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் ராஜாளி தளத்துக்கு வந்துள்ளன.
பத்து நாட்கள் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.