தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியின் எதிர்ப்பை சிறிலங்கா நிராகரிப்பு
சிறிலங்கா கடற்பரப்பில் அடிமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறையைத் தடைசெய்யும் நாடாளுமன்றத் தீர்மானத்துக்கு, தமிழ்நாடு அரசாங்கம் தெரிவித்துள்ள எதிர்ப்பை, சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சிறிலங்கா கடற்பரப்பில் அடிமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் முறையைத் தடைசெய்யும் நாடாளுமன்றத் தீர்மானத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர,
“சிறிலங்காவின் கடற்றொழில் துறையின் நலன்களைக் கருத்தில் கொண்டே புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாங்கள் எமது நலன்களையே பார்க்க வேண்டியுள்ளது. ஏனைய நாடுகளின் மீனவர்களின் கரிசனைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை.
புதிய சட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.