மைத்திரியை இலக்கு வைத்தவருக்கு அடைக்கலம் கொடுத்த 62 வயதுப் பெண்ணுக்கு சிறைத்தண்டனை
தற்போதைய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 2008 ஆம் ஆண்டு விவசாய அமைச்சராக இருந்த போது, அவரைக் கொலை செய்ய முயன்ற விடுதலைப் புலிகளின் பெண் போராளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட 62 வயது பெண் ஒருவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தற்கொலைக் குண்டுதாரி, மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து பொரலஸ்கமுவ பிரிவேனா சந்தியில் 2008ஆம் ஆண்டு ஒக்ரோபர் 9ஆம் நாள் குண்டை வெடிக்க வைத்திருந்தார்.
இதில் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு வாகனம் சேதமடைந்ததுடன் அதில் இருந்த 3 படையினர் காயமடைந்தனர். பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.
குண்டை வெடிக்க வைத்த பெண் போராளிக்கு, வீட்டில் தங்கியிருக்க அடைக்கலம் கொடுத்தார் என்று செல்வகுமார் வேலமணி என்ற 5 பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டார்.
அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நேற்று தீர்ப்பளித்தார்.
அத்துடன், குற்றவாளியான பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பதாகவும், நீதிபதி தெரிவித்தார்.