கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் யோசித ராஜபக்ச – ஓடிவந்த கோத்தா, பசில் ,சிராந்தி
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச சற்றுமுன்னர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர், கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது. பெரும் எண்ணிக்கையான சிறப்பு அதிரடிப்படையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் அனுமதி அளித்த பின்னர், அவரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் சிறைச்சாலை பேருந்து கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்துக்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், வெளியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யோசித ராஜபக்ச கடுவெல நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுவதை அறிந்தவுடன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் யோசிதவின் தாயார் சிராந்தி ராஜபக்ச ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர்.
யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட தகவலை அறிந்ததும், மகிந்த ராஜபக்சவும், கடுவெல நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவும், கடுவெல நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.