செம்மணிப் புதைகுழி விசாரணைக்கு உள்நாட்டு சட்டங்களே போதும்
செம்மணி, மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாக முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என சிறிலங்காவின் நீதி அமைச்சர், ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை நேற்று மாலை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி அகழ்வுப் பணிகளுக்கு அனைத்துலக நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,
“சிறிலங்காவில் உள்ள குற்றவியல் சட்டமே இதற்குப் போதுமானது.
சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில், சந்தேகநபர்களைக் கைது செய்து, அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு உள்நாட்டுச் சட்டங்கள் போதுமானதாகவே உள்ளன.
ஆனால், இந்த விசாரணைகள் இன்னும் அந்தளவிற்கு முன்னோக்கி நகர்த்தப்படவில்லை.தற்போது அகழ்வு மட்டத்திலேயே காணப்படுகின்றன.
எதிர்காலத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனை வழங்குவதற்கு நாட்டில் உள்ள சட்டத்தின்படி நாம் செயற்படுவோம்.
காணாமற்போனோருக்கான பணியகத்தை மூடினால், சிறிலங்காவில் இந்த விசாரணைகளை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய வழி இல்லாமல் போய்விடும்.
எனவே, அந்த பணியகத்தை மூடுவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை.
அதில் பணியாற்றுவோர் மோசடியாகச் செயற்பட்டார்கள் அல்லது குற்றமிழைத்தார்கள் என்பதை நிரூபித்தால், அது குறித்துப் பரிசீலிக்கலாம்.
கடந்த அரசாங்கங்கள் இந்த விவகாரத்தை உரிய முறையில் கையாளவில்லை.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், இதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, தேவையான ஆட்சேர்ப்புகளையும் செய்து, பணிகளை உரிய முறையில் முன்னோக்கி நகர்த்தி வருகிறோம்.
கடந்த காலச் செயற்பாடுகளை வைத்து எங்களைக் கணிக்க வேண்டாம்.
எமது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடுகளைக் கவனித்து, அவை சரியா அல்லது பிழையா எனக் கூறுங்கள்.
செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும். அதற்கு உரிய சகல நடவடிக்கைகளையும் நீதி அமைச்சு செய்யும்
எங்கள் அரசாங்கத்தை தமிழ் மக்கள் முழுமையாக நம்பலாம். வடக்கு தெற்கு என்ற பாகுபாடு இன்றி , குற்றம் செய்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும்.
அதற்காக விசாரணைகளின்றி எவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது.
சிறிலங்கா இராணுவத்தினர் , படுகொலைகளில் ஈடுபட்டு இருந்தால் அதற்கான ஆதாரங்களை முன்வைத்தால், நிச்சயமாக நாம் இராணுவத்தினருக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுப்போம் என்றும், தெரிவித்துள்ளார்.

