ஒரே நேரத்தில் இந்தியப் போர்க்கப்பல்களுக்கு வரவேற்பு – சீனப் போர்க்கப்பல்களுடன் பயிற்சி
இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்எஸ் விக்கிரமாதித்யா, கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்த போது, மேற்கு கடற்பகுதியில் சீனக் கடற்படையின் போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா கடற்படை போர்ப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்து நாள் நல்லெண்ணப் பயணமாக, சீனக் கடற்படையின், 21 ஆவது வழிப்பாதுகாப்பு செயலணியைச் சேர்ந்த லியூசோ மற்றும் சன்யா ஆகிய ஏவுகணைப் போர்க்கப்பல்களும், விநியோக கப்பலான குயிங்ஹாய்ஹுவும் கடந்த 17ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தன.
கொழும்புத்துறைமுகத்தில் தரித்து நின்ற போது சிறிலங்கா கடற்படையுடன் பல்வேறு பயிற்சிகள், நிகழ்வுகளில் சீனக் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்எஸ் விக்கிரமாதித்யா, ஐஎன்எஸ் மைசூர் என்ற நாசகாரி போர்க்கப்பலுடன் கடந்த ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே சீனப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை விட்டு வெளியேறின.
நேற்றுமுன்தினம் காலை 7 மணியளவில், சீனப் போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை விட்டு வெளியேறிய போது, சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும், சீன அதிகாரிகள் பலரும் வழியனுப்பி வைத்தனர்.
கொழும்புத் துறைமுகத்தை விட்டு வெளியேறிய சீனப் போர்க்கப்பல்கள், துறைமுகத்துக்கு வெளியில் உள்ள மேற்குப் பிராந்தியக் கடற்பகுதியில் சிறிலங்கா கடற்படையின் சாகர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலுடன் இணைந்து போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருந்ததாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.