இந்திய விமானந்தாங்கி கப்பலில் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவின் மிகப் பெரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவைப் பார்வையிட்டார்.
மூன்று நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவுக்கு, சிறிலங்கா அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் முப்படைகளின் தளபதிகள், ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவுக்கச் சென்று பார்வையிட்டனர்.
அதையடுத்து நேற்று இரவு ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவில் நடந்த வரவேற்பு மற்றும் கலாசார நிகழ்வுகளில் சிறிலங்காவின் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவுக்குச் சென்று பார்வையிட்டார்.
அங்கு இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா மற்றும் இந்தியக் கடற்படை அதிகாரிகள் அவரை வரவேற்றனர். இந்தியக் கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையும், சிறிலங்கா அதிபருக்கு அளி்க்கப்பட்டது.
அத்துடன், ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவை சுற்றிக் காண்பித்து, அதன் செயற்திறன் குறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு அரசுத் தலைவர், மைத்திரிபால சிறிசேனவே என்பது குறிப்பிடத்தக்கது.