மரைன் படைப்பிரிவை உருவாக்குகிறது சிறிலங்கா கடற்படை – அமெரிக்காவும் உதவி
கடலிலும் தரையிலும் போரிடும் ஆற்றல் கொண்ட மரைன் படைப்பிரிவை சிறிலங்கா கடற்படை புதிதாக உருவாக்கி வருவதாக சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்டு வரும் மரைன் படைப்பிரிவின் பற்றாலியன் ஒன்றுக்கு, மன்னார் முள்ளிக்குளத்தில் உள்ள வடமேற்கு பிராந்திய கடற்படைத் தலைமையகத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சிகள் முடிவடைந்ததும், மரைன் படைப்பிரிவு அதிகாரபூர்வமாக விரைவில் உருவாக்கப்படவுள்ளது.
இந்த மரைன் படைப்பிரிவில், சிறிலங்கா கடற்படையில் உள்ள தரைப்படைப் பிரிவான பட்ரோல்மன் அணியினர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிறிலங்கா கடற்படையின் பட்ரோல் மன் அணிக்கு இந்த ஆண்டில் பயிற்சிகளை அளிப்பது தொடர்பாக, கலந்துரையாட, அமெரிக்க கடற்படையின் மரைன் படைப்பிரிவு அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.
2016ஆம் ஆண்டில், கடற்படை பட்ரோல் மன் பயிற்சிக்கான ஆரம்ப திட்டமிடல் தொடர்பாக சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன், அமெரிக்காவின் மரைன் அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது.
சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், அமெரிக்க கடற்படையின் மரைன் அதிகாரிகளான மேஜர் நிக்கலஸ் ரொபேர்ட் நப்பி, லெப். டிரேக் ஜோன் சம்பர்லைன், சீவ் பெற்றி ஒவ்விசர் கிறிஸ்ரோபர் லீ வில்சன், மற்றும் அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு பணியகத்தின் அதிகாரியான லெப். டேவிட் ஆர்.செசென் ஆகியோர் கலந்து கொண்டனர்.