கடல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜப்பான் – சிறிலங்கா உயர்மட்டப் பேச்சு
பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்காவும், ஜப்பானும், இன்று உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளன.
இரண்டு நாடுகளினதும், வெளிவிவகார அமைச்சுக்களின் மூத்த அதிகாரிகள் நிலையிலான இந்த சிறிலங்கா- ஜப்பான் கொள்கை கலந்துரையாடல் இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது.
இந்தப் பேச்சுக்களில் பங்கேற்கும் சிறிலங்கா குழுவுக்கு, கிழக்காசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான மேலதிகச் செயலர் ரஞ்சித் உயங்கொட தலைமை வகிப்பார்.
அதேவேளை, ஜப்பானிய குழுவுக்கு அந்த நாட்டின், வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் பணிப்பாளர் கசுயா நசிடா தலைமை தாங்குவார்.
இந்தப் பேச்சுக்களில், இருதரப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கான வரைவு ஒன்று குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஜப்பானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது. இந்த கொள்கை கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது.
அதேவேளை, நாளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், கடல்சார் பாதுகாப்ப, பாதுகாப்பு, மற்றும் சமுத்திர விவகாரங்கள் குறித்து ஜப்பானிய குழுவினருக்கும் சிறிலங்கா குழுவினரக்கும் இடையில் மற்றொரு பேச்சும் நடத்தப்படவுள்ளது.