பிரகீத் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைதாகின்றனர்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் பெயர்கள், அவர்கள் எங்கிருக்கின்றனர் என்ற விபரங்களை சந்தேக நபர்கள் வெளியிட்டுள்ளதையடுத்து, அவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி, கிரித்தல இராணுவ முகாமுக்கு கொண்டு சென்ற, சிறிலங்கா இராணுவ லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் பற்றிய தகவல்களும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான முக்கியமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பதால், விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருக்கியிருப்பதாகவும் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.