பிரகீத் கடத்தலுக்கு உத்தரவிட்டவர் பெயரை சந்தேகநபர்கள் வெளியிட்டனர் – விசாரணையில் திருப்பம்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தும் உத்தரவை பிறப்பித்தவரின் பெயரை, விளக்கமறியலில் உள்ள இரண்டு சந்தேக நபர்கள் வெளியிட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னைய அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவரே, இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக, இரண்டு சந்தேக நபர்கள் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து சந்தேக நபர்களிடம் மேலதிக தகவல்களை திரட்டி வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டது தொடர்பான மர்மம் குறித்த விஞ்ஞான ரீதியான சான்றுகளை ஆராயும் நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.