மேலும்

சம்பந்தன், சந்திரிகாவையும் இன்று சந்திக்கிறார் நோர்வே வெளிவிவகார அமைச்சர்

Borge Brendeசிறிலங்காவுக்கு இன்று ஒரு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருக்கும், நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் இருந்த போது, சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் நோர்வே நடுநிலையாளராகப் பணியாற்றியிருந்தது.

எனினும், அந்த அமைதி முயற்சிகள் முறிவடைந்ததையடுத்து, நோர்வே அமைச்சர்கள் எவரும் சிறிலங்கா வரவில்லை.

கடைசியாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் 2005ஆம் ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர், முதல்முறையாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் இன்று சிறிலங்கா வரவுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

முதலில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில், மங்கள சமரவீரவுடன் பேச்சுக்களை நடத்தும், நோர்வே வெளிவிவகார அமைச்சர், அதன்பின்னர், கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்.

இதையடுத்து இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

அத்துடன், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவரான சந்திரிகா குமாரதுங்கவையும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதிலும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *