போர் விமானங்கள் குறித்து பாகிஸ்தானுடன் பேசவேயில்லை – என்கிறார் பாதுகாப்புச்செயலர்
பாகிஸ்தானிடம் இருந்து, எட்டு ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கத்துடனான பேச்சுக்களில் கூட இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்படவில்லை என்று அவர் தி ஹிந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது குறித்து தமது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இதுபற்றிய செய்திகள் தவறானவை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
போர் விமானங்களை வாங்கும் தேவை எழுந்தால், சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படைத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.