கொழும்பு வரும் பிரித்தானிய துணைப் பிரதமர் – சிறிதரனையும் சந்திக்கிறார்
பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி சிறிலங்காவுக்கு அவசர பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு வரும் டேவிட் லாமி சிறிலங்கா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
அவர் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தங்கியிருக்கும் போது பிரித்தானிய துணைப் பிரதமர் தமிழ் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
பிரித்தானிய துணைப் பிரதமரைச் சந்திப்பதற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐ.நா. பணியகத்தில் நடைபெறும் நிகழ்வில் குழந்தைகள் பராமரிப்புக்கான உலகளாவிய பரப்புரைக்கான சாசனம் குறித்த உடன்பாட்டிலும் டேவிட் லாமி கையெழுத்திடுவார்.
பிரித்தானிய துணைப் பிரதமர் லாமி செவ்வாய்க்கிழமை மாலை சிறிலங்காவில் இருந்து புறப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
