சிறிலங்கா- பாகிஸ்தான் இடையே 8 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்து
சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று நடத்தப்பட்ட உயர்மட்டப் பேச்சுக்களின் போது, எட்டு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான குழுவினருக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இன்று அதிபர் செயலகத்தில் நடந்த பேச்சுக்களின் போதே இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
சிறிலங்கா அதிபர், பிரதமர், பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் முன்னிலையில், வர்த்தகம், நிதி புலனாய்வு, விஞ்ஞான, தொழில்நுட்பம், உடல்நலன் குறித்த எட்டு புரிந்துணர்வு உடன்பாடுகளில், இருநாடுகளினதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.
முன்னதாக, பாகிஸ்தானுடன் பத்து உடன்பாடுகளில் கையெழுத்திட சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டன. எனினும், இன்று எட்டு உடன்பாடுகளே கையெழுத்திடப்பட்டுள்ளன.
அதேவேளை, இன்று காலை பாகிஸ்தான் பிரதமருக்கு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இராணுவ அணிவகுப்புடன் கூடிய மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து. அதிபர் செயலகத்தில் இருநாடுகளினதும் தலைவர்களுக்கிடையில் பேச்சுக்கள் இடம்பெற்றன.