மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவும் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு
சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நேற்றுடன் ஓய்வு பெற்றிருக்கிறார்.
அவருக்கு பனாகொட இராணுவத் தலைமையகத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
போர் முடிவுற்ற பின்னர், யாழ். படைகளின் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட, மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, தமிழ் மக்களை இராணுவக் கெடுபிடிகளுக்குள் வைத்திருக்கும் மகிந்த ராஜபக்ச அரசின் திட்டத்துக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை கடந்த மாதம் 25ஆம் நாள் ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு, அவரது தாய்ப்படைப்பிரிவான கஜபா ரெஜிமென்ட் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளித்துள்ளது.
இந்த அணிவகுப்பு கடந்த 30ஆம் நாள் சாலியபுரவில் உள்ள கஜபா படைப்பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்றது.