ஐ.நா அறிக்கை குறித்து சிறிலங்காவுடன் முக்கிய பேச்சு நடத்துகிறார் நிஷா பிஸ்வால்
ஒரு நாள் பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், நாளை காலை சிறிலங்கா வரவுள்ளதை சிறிலங்கா வெளிவவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
நிஷா பிஸ்வாலுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றும் கொழும்பு வரவுள்ளது.
இந்தக் குழுவினர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து, ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
அத்துடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், நிஷா பிஸ்வால் சந்திக்கவுள்ளார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் சந்திப்பாரா என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.