சங்ககாரவுக்கு பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி
அனைத்துலகத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற்றுள்ள சிறிலங்கா அணியின் வீரர், குமார் சங்ககாரவுக்கு பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவியை வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வந்துள்ளார்.
இந்திய- சிறிலங்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டியில் குமார் சங்ககார இன்று கடைசி நாள் ஆட்டத்தை ஆடியிருந்தார்.
இதனைகட காண கொழும்பில் போட்டி நடந்த மைதானத்துக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
போட்டி முடிவின், சங்ககாரவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய சிறிலங்கா அதிபர், பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த கோரிக்கை தனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ள போதிலும், இதுகுறித்து சிந்திக்க காலஅவகாசம் தேவைப்படுவதாக சங்ககார அறிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த திங்கட்கிழமை நடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஐதேகவின் வேட்பாளர் ரோசி சேனநாயக்கவுக்கு, பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவியை அளிக்க அரசாங்கம் முன்வந்த போதிலும் அவர் அதனை நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.