நிஷா பிஸ்வாலுடன் சிறிலங்கா வருகிறார் ரொம் மாலினோவ்ஸ்கி
இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு மூத்த அதிகாரியும் கொழும்பு வரவுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினொவ்ஸ்கியும், நிஷா பிஸ்வாலுடன் இன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
இன்றும் நாளையும், கொழும்பில் தங்கியிருக்கும் இவர்கள், சிறிலங்கா அரசாங்கம் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தனியார் துறையினரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
இவர்களின் பயணத்தின் போது, பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், நல்லிணக்கம் , நீதியை ஊக்குவித்தல் போன்றவற்றில் அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நிஷா பிஸ்வால், நாளை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்வார்.
எனினும், ரொம் மாலினோவ்ஸ்கி வரும் 27ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரொம் மாலினோவ்ஸ்கியின் பயணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும், அவர் பிரதானமாக பொறுப்புக்கூறல் விவகாரங்களில் கவனம் செலுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.