மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம் – சுசில், அனுரவை பதவியில் இருந்து நீக்கினார்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவையும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளார்.
இந்த இரண்டு கட்சிகளின் தலைவர் என்ற வகையில், மைத்திரிபால சிறிசேன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலராக துமிந்த திசநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பதில் பொதுச்செயலராக பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவையும், அவர் நியமித்துள்ளார்.
அத்துடன், புதிய பதில் செயலர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு, ஓகஸ்ட் 28ஆம் நாள் வரை இடைக்காலத் தடைவிதிக்கும் கொழும்பு மாவட்ட நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது.