மைத்திரியின் கடிதத்தை வெளியிடக் கூடாது – தேர்தல் ஆணையாளர் உத்தரவு
மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எழுதிய கடிதத்தை திரும்பத் திரும்ப வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒரு வேட்பாளர் என்ற வகையில், மகிந்த ராஜபக்சவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதாலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் மைத்திரிபால சிறிசேன நேற்று எழுதிய கடிதத்துக்கு ஊடகங்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனவோ, அதுபோல, இன்று மகிந்த ராஜபக்ச எழுதிய கடிதத்துக்கும் ஊடகங்கள் சமமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சட்டவாளர்கள் சங்கம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டவாளர்கள் சங்கம் ஆகியன தேர்தல்கள் ஆணையாளரிடம் செய்த முறைப்பாட்டை அடுத்தே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவும், தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.