அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முக்கிய ஆலோசனை – சிறிலங்காவுக்கான தூதுவர் பதவியேற்பு
சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக, அதுல் கெசாப் நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில் அவர், பதவியேற்பு உறுதியுரை எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அதுல் கெசாப்பின் மனைவி மற்றும் பிள்ளைகளும் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முதன்மை அதிகாரியும், இராஜாங்கச் செயலரின் சிறப்பு ஆலோசகருமான, கவுன்சிலர் தோமஸ் ஏ.சானோன் நேற்று முன்தினம் பிற்பகல், சிறிலங்காவுக்கான புதிய தூதுவர் அதுல் கெசாப்புடன், ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவில் அமெரிக்காவின் எதிர்கால நடவடிக்கைகள், நகர்வுகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், புதிய தூதுவராக அதுல் கெசாப் பதவியேற்றுள்ளதும், புதிய தூதுவருடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆலோசனை நடத்தியுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.