வாக்காளர்களைக் குழப்பியுள்ளார் விக்னேஸ்வரன் – ‘தினக்குரல்’ ஆசிரியர் கருத்து
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரசுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுட்டன் வெற்றி பெற்ற விக்னேஸ்வரனுக்கு, அதனை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடப்பாடு உள்ளது.
அவர் நடுநிலை வகிப்பதாக கூறுகிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட கட்சி ஒன்றுக்குப் பின்னால் இருப்பதாக தெளிவாக இருக்கிறது.
அவரது நிலைப்பாடு வாக்காளர்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் ஆதரவு அவசியம் எனக் கருதுவதாகவும், ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதனை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், விக்னேஸ்வரனின் அறிக்கை மேற்குலக ஆதரவு தேவை என்பதை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், ஆனால் இந்தியாவைப் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.