யாழ்ப்பாணத்தில் 7 ஆசனங்களையும் கைப்பற்றும் கூட்டமைப்பு – சுமந்திரன் நம்பிக்கை
வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார், கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 7 ஆசனங்களையும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கூட்டமைப்புக்கு இருக்கிறது.
ஆசனம் ஒன்றைப் பெறுவதற்கான ஆகக்குறைந்த 5 வீத வாக்குகளை ஏனைய கட்சிகளால் பெற முடியாமல் போகும்.
இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 வரையான ஆசனங்களைக் கைப்பற்றக் கூடியதாக இருக்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் இருப்பதாக வெளியாகும் செய்திகள் தவறு.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் வேட்பாளர்களுக்கிடையில் போட்டி இருப்பது இயல்பு. ஆனால் பிளவுகள் இல்லை.
விருப்பு வாக்குகளுக்கான போட்டியில் எந்த வேட்பாளருக்கும் சார்பாக செயற்பட வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விரும்பவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.