கோத்தாவுக்கு துமிந்த திசநாயக்க சவால்
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளமை தொடர்பான உண்மையான சான்றிதழை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுஜன பெரமுனவின் வேட்பாளரா கோத்தாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமை துறப்பு சான்றிதழை வெளிப்படுத்துவதற்கு ஏன் தயங்குகிறார்.?
குடியுரிமை துறப்பு சான்றிதழ் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ள கோத்தாபய ராஜபக்ச, அதனை ஏன் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்?
அந்த ஆவணத்தை வெளிப்படுத்துவதன் மூலம், அவர் போட்டியிடுவதற்கான தகுதி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் முடிவு கட்ட முடியும். அவரைச் சுற்றி அணி திரளும் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்.
எனது கணிப்பு என்னவென்றால், அவர் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்காக சமர்ப்பித்த விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதை, உறுதிப்படுத்தி வழங்கிய துண்டுச் சீட்டை மட்டுமே வைத்திருக்கிறார்.
வரும் 11ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு முன்னதாக அவர் அந்த சான்றிதழை வெளியிட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.