கூட்டு அரசில் இருந்து விலக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுப்பு
கூட்டு அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளதால், கூட்டு எதிரணியுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுக்கள் முடங்கியுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியும் பேச்சுக்களை நடத்தி வந்தன.
கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்று கூட்டு எதிரணி நிபந்தனை விதித்திருந்தது.
எனினும், இப்போது உடனடியாக அரசாங்கத்தை விட்டு விலக முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் பேச்சுக்களை நடத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், அவ்வாறு விலகிக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து இரண்டு தரப்பும் இணைந்து தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பான பேச்சுக்கள் முடங்கியுள்ளன.
அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்ளாத வரையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இனிமேல் பேச்சுக்களுக்கு வாய்ப்பில்லை என்று, கூட்டு எதிரணியின் தரப்பில் பேச்சுக்களில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.