அரசிதழுக்கு எதிரான மனுக்களை விலக்கிக் கொள்ள இணக்கம் – உள்ளூராட்சித் தேர்தலுக்கு பச்சைக்கொடி
உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அரசிதழுக்கு (வர்த்தமானி) எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை விலக்கிக் கொள்ள முறைப்பாட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.
உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இந்த தகவலை வெளியிட்டார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அரசிதழுக்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்திருந்த ஆறு மனுதாரர்களுடனும் தாம் நடத்திய பேச்சுக்களை அடுத்து, அவர்களை முறைப்பாடுகளை விலக்கிக் கொள்ள இணங்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அதேவேளை, இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி சட்டமா அதிபர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட போதும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது.
இந்த மனுக்கள் வரும் டிசெம்பர் 4ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்த மனுக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டால், உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழை நடைமுறைப்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படும் என்பதுடன், அதனடிப்படையில் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு இருந்து வந்த தடையும் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.