நாடாளுமன்றத்துக்குள் நுழைய கீதா குமாரசிங்கவுக்கு தடை
நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, கீதா குமாரசிங்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தடை விதித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவர் என்று சிறிலங்கா உச்சநீதிமன்றம் கடந்தவாரம் அளித்த தீர்ப்பு, நேற்று பிற்பகல் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகருக்கு முறைப்படி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்தே, கீதா குமாரசிங்கவை, நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட கீதா குமாரசிங்கவுக்குப் பதிலாக, காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளில் அடுத்த நிலையில் உள்ள முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவை, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பியசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக இன்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட கீதா குமாரசிங்க, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த போது பெற்றுக் கொண்ட ஊதியம், மற்றும் சிறப்பு கொடுப்பனவுகள் போன்றவற்றை மீளச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.