இன்று காலை பங்களாதேஷ் புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை பங்களாதேசுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
வரும் 15ஆம் நாள் வரை பங்களாதேசில் தங்கியிருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷ் அதிபர் அப்துல் ஹமீத், பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார மற்றும் விவசாய உறவுகளை வலுப்படுத்தும் பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளும் இந்தப் பயணத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன.
பயணத்தின் இறுதி நாளன்று, பங்களாதேசில் உள்ள வர்த்தக மன்றத்தில் சிறிலங்கா அதிபர், சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.
இதன் போது, பங்களாதேஷ்- சிறிலங்கா வர்த்தகர்கள் மத்தியில் பல்வேறு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.