ஓகஸ்ட் நடுப்பகுதியில் சிறிலங்கா வரவுள்ள நோர்வே ஆய்வுக்கப்பல்
நோர்வேயின் கடல்சார் ஆய்வுக்கப்பல் டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் (Dr. Fridtjof Nansen) வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, நோர்வேயின் கடல்சார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பீற்றர் எம்.ஹோகன் (Peter M. Haugan) தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் கடல்சார் ஆராய்ச்சி நிறுவகத்தின் கொள்கை பணிப்பாளரும், நோர்வேயில் உள்ள பென்சன் பல்கலைக்கழக புவிபௌதிகவியல் பேராசிரியருமான பீற்றர் எம்.ஹோகன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வேயின் நிதியுதவியுடன் உணவு விவசாய நிறுவனத்தினால் இயக்கப்படும் டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் ஆய்வுக் கப்பல் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்கு வரும்.
அது சிறிலங்காவின் ஆய்வாளர்களுடன் இணைந்து, சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வுகளில் ஈடுபடும்.
அதன் பின்னர் பங்களாதேஷ் ஆய்வாளர்களுடன் இணைந்து அந்த நாட்டின் கடல்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கிழக்கு ஆபிரிக்க கடற்பரப்பில் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள இந்தக் கப்பல் சிறிலங்காவுக்கு வர அனுமதி கோரியதாகவும், அதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்திருப்பதாகவும் செய்தி வெளியாகியிருந்த நிலையில் நோர்வே பேராசிரியர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.