தடைக்குப் பின் கொழும்பு வந்துள்ள முதலாவது வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்
பிரெஞ்சு கடற்படையின், நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான, ‘பியூடெம்ப்ஸ்-பியூப்ரே’ (Beautemps-Beaupré) நேற்று சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.
நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படை மரபுகளுக்கு அமைய, வரவேற்பு அளிக்கப்பட்டது.
80.65 மீற்றர் நீளமான, ‘பியூடெம்ப்ஸ்-பியூப்ரே’ கப்பலில், கொமாண்டர், பெர்தியோ டிமிட்ரி தலைமையில், 58 கடற்படையினர் பணியாற்றுகின்றனர்.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நீர்ப்பரப்பு விவகாரங்கள் குறித்து பிரெஞ்சு கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் கப்பலின் அதிகாரிகள் குழு சிறிலங்காவின் தேசிய நீர்ப்பரப்பு ஆய்வு அலுவலகத்தின் (SLNHO) மூத்த அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளனர்.
வரும் 13ஆம் திகதி இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை விட்டு புறப்பட்டுச் செல்லும்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா கடற்பரப்புக்குள் நுழைவதற்கு வெளிநாட்டு சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல்களுக்கு ஒரு ஆண்டு தடைவிதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரியில் அந்த தடையை தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் நீக்கிய நிலையில், கொழும்பு துறைமுகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் இதுவாகும்.