சிறிலங்காவில் இருந்து இந்தியா செல்லும் விமானங்கள் கடத்தப்படலாம் என எச்சரிக்கை
சிறிலங்கா,நேபாளம், பங்களாதேசில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்களை கடத்த, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அமைப்புகள் அல்லது தனிநபர்கள் முயற்சிக்கலாம் என, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO),எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அனைத்து புலனாய்வுத் தகவல்களையும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு, இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளும் என, உயர்மட்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தரப்புகள், அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் விமானங்களைக் கடத்தத் திட்டமிடப்படக் கூடிய ஆபத்துக் குறித்து, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையங்களில் கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், புலனாய்வுப் பகிர்வு வழிமுறைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.