சிறிலங்காவை தாக்குதலுக்கு பயன்படுத்த யாரையும் அனுமதியோம்
இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ, சிறிலங்காவின் கடல் அல்லது வான் பரப்பை தாக்குதலுக்காக பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லைகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர்,
சிறிலங்காவின் வான்பரப்பையோ, அல்லது நாட்டின் கடற் பிரதேசத்தையோ பயன்படுத்தி, மற்றொரு நாட்டைத் தாக்குவதற்கு எந்தவொரு தரப்பினருக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்காது.
இந்தியப் பெருங்கடலுக்குள் புவிசார் அரசியல் பிரச்சினைகளில் சிறிலங்கா ஈடுபடாது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் சிறிலங்கா நல்லுறவான, இராஜதந்திர உறவுகளைப் பேணுகிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, பாதுகாப்பு கரிசனைகளை அடுத்து, சிறிலங்காவில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் அறிவித்துள்ளது.