சிறிலங்கா விமானப்படையும், இராணுவமும் தனித்தனியாக விசாரணை
விமானப்படையின், பெல் 212 உலங்குவானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்த சம்பவம் குறித்து சிறிலங்கா இராணுவமும், விமானப்படையும் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இந்த விபத்தில், ஆறு சிறிலங்கா படையினர் உயிரிழந்தனர், ஆறு பேர் காயமடைந்தனர்.
உலங்குவானூர்தி, நேற்றுக்காலை 6:47 மணிக்கு ஹிங்குராகொட விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு, காலை 7:08 மணியளவில் மாதுரு ஓயாவில், இராணுவ சிறப்புப் படையினரை, ஏற்றிச் சென்ற நிலையில், காலை 8:17 மணியளவில் விபத்துக்குள்ளானது.
உலங்குவானூர்தி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதனை தரையிறக்க முயன்ற போது நீர்த்தேக்கத்தில் விழுந்ததாகவும், விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த உலங்குவானூர்தியில், ஆறு சிறிலங்கா இராணுவ விசேட படையினரும், 2 விமானிகள் உள்ளிட்ட 6 விமானப்படையினரும் இருந்துள்ளனர்.
அனைவரும், உயிருடன் மீட்கப்பட்டு அரலகங்வில பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக, எட்டு பேர் பொலன்னறுவை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு நான்கு இராணுவ சிறப்புப் படையினரும், இரண்டு விமானப்படை சுடுநர்களும், உயிரிழந்தனர்.
இந்த, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிறிலங்கா இராணுவமும் விமானப்படையும் தனித்தனி விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் பந்து எதிரிசிங்க ஒன்பது பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.
அதேவேளை, இராணுவத்தின் சார்பில், ஆதாரங்களை சேகரிக்க நிபுணர் குழுக்கள் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிக்கோ உறுதிப்படுத்தியுள்ளார்.