மாதுருஓயா உலங்குவானூர்தி விபத்தில் 5 சிறிலங்கா படையினர் பலி
மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஹிங்குராகொட விமானப்படைத் தளத்தில் இருந்து சென்ற பெல் 212 உலங்குவானூர்தி, மாதுரு ஓயா விசேட படைப்பிரிவு பயிற்சி முகாமில், 8 சிறிலங்கா இராணுவ விசேட படையினரை ஏற்றிக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளது.
இதையடுத்து அந்த உலங்குவானூர்தியில் இருந்த 12 பேரும் மீட்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை அறிவித்திருந்தது.
காயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேரில், 3 இராணுவ விசேட படைப்பிரிவினரும், 2 விமானப்படை சுடுநர்களும் சிகிச்சை பலனின்றி பொலன்னறுவ மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.
ஏனைய 7 பேரும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 9 பேர் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா விமானப்படைத் தளபதி நியமித்துள்ளார்.