இந்திய- சிறிலங்கா உடன்பாடுகளுக்கு தடை கோரி உயர்நீதிமன்றில் மனு
சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்திடப்பட்ட, ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகளை, செல்லுபடியற்றவை என உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசப்பற்று தேசிய இயக்கம், பூகோள சிறிலங்கா மன்றம், சுதேசிக ஜாதிக வியாபாரய மற்றும் துன்ஹெல ஜாதிக வியாபாரய ஆகிய அமைப்புகளின் சார்பில், கலாநிதி குணதாச அமரசேகர, கலாநிதி வசந்த பண்டார, சியாமேந்திர விக்ரமாராச்சி, சமிந்த பிரியதர்சன, கலாநிதி அசோக இந்திரஜித் கமலதாச மற்றும் பல்லந்துடாவ அச்சிகே நுவான் சாமர இந்துனில் ஆகியோர் இந்த அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை உறுப்பினர்கள், சட்டமா அதிபர் மற்றும் பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ஏப்ரல் 5 ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் முன்னிலையில், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.
இந்தப் புரிந்துணர்வு உடன்பாடுகள், சிறிலங்காவின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை.
இவற்றின் உள்ளடக்கங்கள் குறித்து, பொதுமக்களுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இது மக்களின் உரிமைகளை மீறுவதாகும்.
இந்த உடன்பாடுகள் சிறிலங்காவின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.
இவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் கையெழுத்திட அரசாங்கம் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம், தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், இந்த உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.