சிங்களப் பேரினவாதக் கட்சிகளிடம் சிக்கிய மன்னார், வவுனியா மாவட்டங்கள்
உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ள போதும், மன்னார், வவுனியா மாவட்டங்கள், சிங்களப் பேரினவாதக் கட்சிகளிடம் பறிபோயிருக்கின்றன.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளையும் சபைகளையும் பெற்றிருக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகரசபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், மன்னார் மற்றும் முசலி பிரதேச சபைகளை ஐக்கிய மக்கள் சக்தியும், நானாட்டான் பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், கைப்பற்றியுள்ளன.
எனினும், மாவட்ட ரீதியாக தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளையும் ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது. அடுத்த இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது.
மூன்றாமிடத்தில் தமிழ் அரசுக் கட்சியும், நான்காமிடம் இடத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், 8ஆவது இடத்தில் தமிழ் காங்கிரசும் உள்ளன.
அதேவேளை, வவுனியா மாவட்டத்தில், வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கைப்பற்றியுள்ள போதும், வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு (சிங்கள), வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபைகளை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், கைப்பற்றியுள்ளன.
மாவட்ட ரீதியான வாக்குகள் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி முதலாவது இடத்திலும், இலங்கை தமிழ் அரசு கட்சி இரண்டாமிடத்திலும், ஐக்கிய மக்கள் சக்தி 3ஆம் இடத்திலும் உள்ளன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்பன, நான்காவது, ஆறாவது இடங்களில் உள்ளன.