ஒக்ரோபர் முதல் வாரம் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தேர்தல்
உச்சநீதிமன்ற உத்தரவுக்கமைய எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை வரும் ஒக்ரோபர் முதல் வாரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெற்ற போது, எல்பிட்டிய பிரதேச சபைக்கு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால், அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்தநிலையில், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும், அந்த வேட்புமனுவை ஏற்றுக் கொண்டு தேர்தலை உடனடியாக நடத்துமாறு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
இதையடுத்தே ஒக்ரோபர் முதல் வாரத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.