பரப்புரை காலத்தில் நீதிமன்றுக்கு அலையப் போகும் கோத்தா
கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, ஒக்ரோபர் 15ஆம் நாளில் இருந்து தினமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று, கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
தங்காலையில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைப்பதற்கு, 33 மில்லியன் ரூபா, பொது நிதி முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு மேல் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஒக்ரோபர் 15ஆம் நாளில் இருந்து வழக்கு நாளாந்தம் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படும் என, சிறப்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டு, பரப்புரைகளை தீவிரமடையக் கூடிய காலத்தில், கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான இந்த வழக்கு நாளாந்தம் விசாரிக்கப்படுவது, அவருக்குப் பெரும் பின்னடைவாக அமையலாம் என்று கூறப்படுகிறது.