மேலும்

கோத்தாவை கொல்ல முயற்சி?

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்கு பாதாள உலக குழுவினருடன் பேரம் பேசப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சின்னையா சிவரூபனிடம் விசாரணை நடத்தி வரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே கோத்தாபய ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரியுள்ளனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்காக துப்பாக்கிதாரிகளின் குழுவொன்றை புலம்பெயர் தமிழர்கள் நிறுத்தியுள்ளனர் என்று மருத்துவர் சிவரூபன் தகவல் வெளியிட்டுள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் உதவியுடன் கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்வது கடினம் என்பதை புரிந்து கொண்ட புலம்பெயர் தமிழர்கள்,  இதற்கான பொறுப்பை பாதாள உலக குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர் என்றும் மருத்துவர் சிவரூபன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கூறியுள்ளார்.

இதற்காக பெருமளவு பணத்தை புலம்பெயர் தமிழர்கள் பாதாள உலக புள்ளிகளுக்கு வழங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச தவிர, டக்ளஸ் தேவானந்தா, கருணா உள்ளிட்ட பலரும் புலம்பெயர் தமிழர்களின் தாக்குதல் பட்டியலில் இருப்பதாகவும், மருத்துவர் சிவரூபன் தெரிவித்துள்ளார் எனவும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *